சென்னையில் முன்விரோதம் காரணமாக பட்டப் பகலில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை தீடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி தேசிங்கு (46). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி தேசிங்கு இன்று மதியம் தனது வீட்டருகே உள்ள தெரு முனையில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ரவுடி தேசிங்கை ஓட ஓட கத்தியால் கழுத்தில் அறுத்துடன், சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றது. இதில் ரவுடி தேசிங்கு சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் மீன்பிடி துறைமுகம் போலீஸார் விரைந்து வந்து தேசிங்கு உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரவுடி லோகேஷ் (27), அக்கேஷ்(26), கோபி என்கிற வெங்கடேசன்(30) ஆகிய மூன்று பேருக்கும் கொலை செய்யப்பட்ட தேசிங்குக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், இதனால் லோகேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தேசிங்கை வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீஸார் தப்பி ஓடிய ரவுடி லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.
தலைமறைவான ரவுடி லோகேஷ், அக்கேஷ், வெங்கடேசன் மீது ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் வீட்டருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!
வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!