அரியலூர் அருகே முன்விரோத தகராறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சகோதரர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (24). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இது முன்விரோதமாக உருவாகி இருவரும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை மனதில் வைத்துக்கொண்டு சூர்யாவை பழிதீர்க்க விஜயராகவன் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக காத்திருந்த அவர், தனது சகோதரர் பரமேஸ்வரன் (21) உடன் சேர்ந்து பகை தீர்க்க இந்த ஆண்டு கோயில் திருவிழாவை எதிர்பார்த்து இருந்திருக்கிறார். அதன்படி, நேற்று நடைபெற்ற திருவிழாவின் போது அங்கு வந்த சூர்யாவை, விஜயராகவனும், பரமேஸ்வரனும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் மூவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, விஜயராகவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவை குத்த முயற்சித்துள்ளார். அவர் தப்பிச்செல்ல முயன்றதால் கத்தி அவர் மீது பட்டு படுகாயம் ஏற்பட்டது.
இதில் காயங்களுடன் கீழே மயங்கி விழுந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது சூர்யாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூர்யா அளித்த புகாரின் பேரில் விஜயராகவன் மற்றும் பரமேஸ்வரனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவின்போது நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!
வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!