தஞ்சையில் போஸ்டர் பரபரப்பு
தஞ்சையில் போஸ்டர் பரபரப்பு

தஞ்சையில் பரபரப்பு… மது விலக்கு போஸ்டராக மாறிய நீட் விலக்கு போஸ்டர்!

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக தஞ்சை மாநகரம் முழுவதும் சிவப்பு - கருப்பு வண்ணத்தில் நீட் விலக்கு - நம் இலக்கு என்ற வாசகத்துடன் மாநகரின் முக்கிய வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

மேலும் இந்த போஸ்டரில் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்திற்கு உங்கள் ஆதரவை பதிவு செய்ய இந்த கியூஆர் கோடு ஸ்கேன் செய்யவும் என அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்கள் யார் ஒட்டியது, எந்த கட்சியினர் ஒட்டியுள்ளனர் என்பது குறித்து போஸ்டரில் எதுவும் இடம் பெறவில்லை. இந்நிலையில் இன்று அந்த போஸ்டர்களில் நீட் என்ற வார்த்தைக்கு பதிலாக மேலே கருப்பு ஸ்டிக்கரில் மது என்ற வார்த்தை உள்ள ஸ்டிக்கரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.

இதனால் நீட்டுக்கு பதிலாக மது என்ற வார்த்தை மாறி, மது விலக்கு நம் இலக்கு என்ற வகையில் அந்த போஸ்டர்கள் தஞ்சை மாநகரம் முழுவதும் காட்சியளிக்கின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ள நிலையில், நீட் விலக்கு போஸ்டர், தற்போது மதுவிலக்காக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in