சிவகங்கை தொகுதியில் நான்குமுனை போட்டி என்று நினைத்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினமான நேற்று மாலை அதிமுக முன்னாள் அமைச்சரின் மகள் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, அக்கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சிவகங்கையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரமும், அதிமுகவில் சேவியர்தாஸும், பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் தேவநாதன் யாதவும், நாம் தமிழர் கட்சியில் எழிலரசி முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இதில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட பலத்த எதிர்ப்பு ஆரம்பம் முதலே கிளம்பிய நிலையில், பா.சிதம்பரம் செல்வாக்கில், கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய சிவகங்கை மாவட்ட தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருமயம் மற்றும் ஆலங்குடி தொகுதிகளும் அடங்கியுள்ளது.
இதில் ஆலங்குடி தொகுதியில் கடந்த 1984ம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வெங்கடாசலம். பின்னர் 96ல் சுயேச்சையாகவும், 2001ல் மீண்டும் அதிமுக சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அடையாளம் தெரியாத கும்பலால் வெங்கடாசலம் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவர் மறைந்து 14 வருடங்கள் கடந்து விட்டாலும் இப்போது வரை அவரது குடும்பத்திற்கு ஆலங்குடி தொகுதியில் நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது. இவரது மகள் தனலட்சுமி, தமிழ் முத்தரையர் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவன தலைவராக இருந்து வருகிறார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று திடீரென சுயேச்சை வேட்பாளராக தனலட்சுமி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி, சுயேச்சையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது, மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் கார்த்தி சிதம்பரத்தின் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ்காரர்களே... அடுத்த கட்சிக்கு வாக்களிக்க விரும்பாத நிலையில், தனலட்சுமிக்கு வாக்குகளிப்பார் என்று புது கணக்கு சொல்கிறார்கள் சிவகங்கை தொகுதி அரசியல் விமர்சகர்கள்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!
முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!