கர்நாடகா மாநிலம், தார்வாட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை மாற்ற வேண்டும் என லிங்காயத் துறவிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், தார்வாட் மக்களவைத் தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் எம்பி-யாக இருப்பவர் தற்போதைய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. இத்தொகுதியில் லிங்காயத்துகள் பெரும்பான்மையாக உள்ளனர். பிரகலாத் ஜோஷி பிராமண சமூகத்தை சேர்ந்தவர். இந்தத் தேர்தலில் தார்வாட் தொகுதியில் போட்டியிட பிரகலாத் ஜோஷிக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், அவருக்கு எதிராக லிங்காயத் துறவிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தார்வாட் தொகுதியில் வேட்பாளரை மாற்ற வேண்டும் என பாஜக தலைமைக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஃபக்கிரேஷ்வர் மடத்தின் தலைமை துறவியான ஃபக்கிரா திங்கலேஷ்வர் சுவாமி கூறியதாவது:
"கர்நாடகாவைச் சேர்ந்த துறவியர்கள், தார்வாட் தொகுதி எம்பி (பாஜகவின் பிரகலாத் ஜோஷி) பற்றி விவாதித்துள்ளனர். அனைத்து மடங்களின் தலைவர்களும் எம்பி-யை மாற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் நான்கு நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர். மார்ச் 31 வரை காத்திருப்போம்.
இந்த 4 நாட்களில் பாஜக மேலிடம் என்ன செய்கிறது என்று பார்ப்போம். அதன்பிறகு, ஏப்ரல் 2-ம் தேதி, நாங்கள் ஒன்றாக வந்து எங்கள் முடிவைப் பற்றி உங்களுக்கு (ஊடகங்கள்) சொல்வோம். அனைத்து சமூகமும் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கட்சியைப் பற்றி பேசவில்லை. பிரகலாத் ஜோஷி மற்றும் அவரது செயல்பாடு குறித்து பேசுகிறோம்.
வடக்கில் உள்ளதைப் போலவே தெற்கிலும் துறவியர்கள், அரசியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பதிலளித்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "ஃபக்கிரேஷ்வர் மடம் மற்றும் துறவியர்களுடன் 30 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. துறவியர்களின் கருத்துகளை ஆசிர்வாதமாக கருதுகிறேன். தவறான புரிதல்கள் ஏதும் இருந்தால் வரவிருக்கும் நாள்களில் அவை தெளிவுபடுத்தப்படும்." என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!
முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!