அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் பெமா காண்டு மற்றும் அக்கட்சியை சேர்ந்த மேலும் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி எம்எல்ஏ-க்களாக தேர்வாக உள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளும், 2 மக்களவை தொகுதிகளும் உள்ளன. அங்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று, 2 மக்களவைத் தொகுதிகளுக்கு 15 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சட்டப் பேரவைத் தேர்தல் மனுத்தாக்கலில் அம்மாநில ஆளும் பாஜக முதல்வர் பெமா காண்டு மற்றும் 4 பாஜக எம்எல்ஏ-க்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதேபோல், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் பிற வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால், ஜிக்கே டாகோ (தாலி தொகுதி), நியாடோ டுகோம் (தாலிஹா), ரட்டு தேச்சி (சாகலி), முச்சு மிட்டி (ரோயிங்) ஆகிய பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.
இந்நிலையில் வேட்பமனுக்களை திரும்பப் பெற வரும் 30ம் தேதி கடைசி நாள் என்பதால் தங்களின் வேட்பாளர்கள் மேலும் பலர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளதாக முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக 60 பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேசியவாத காங்கிரஸ், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஏ) முறையே 17 மற்றும் 2 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதியும், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெற உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!
முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!