விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர்… ஆம்புலன்ஸாக மாறிய தீயணைப்பு வாகனம்!

தூத்துக்குடி விபத்து
தூத்துக்குடி விபத்து

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் முகேஷ் (18). இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, அவர் கதிரேசன் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எட்டயபுரம் சாலை வளைவு ரோட்டில் எதிரே வந்த அரசு பேருந்தில் மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார், அதில் அவரது இடுப்புப் பகுதி முழுவதும் நசுங்கி சேதமடைந்தது.

 விபத்து
விபத்து

இந்த விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் பதைபதைத்து போயினர். ஆனால், இளைஞர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை உணர்ந்து சுதாரித்த அங்கிருந்த சிலர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக வரவேண்டிய ஆம்புலன்ஸ் நீண்ட நேரமாகியும் வரவில்லை என தெரிகிறது. இதனால் காயமடைந்த முகேஷ், சாலையிலேயே வலியால் வெகுநேரமாக துடித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தீயணைப்புத்துறையினர், விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் வலியால் துடித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்து அவரை மீட்டு, தீயணைப்புத்துறை வாகனத்திலேயே முகேஷை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

 விபத்து
விபத்து

முகேஷுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர் . விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in