வாக்காளர்கள் அதிர்ச்சி! சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பு படை வீரர் காயம்

வாக்காளர்கள் அதிர்ச்சி! சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பு படை வீரர் காயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், சுக்மா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறும் இடம் மாவோயிஸ்ட் நிறைந்த இடமாகும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதமுள்ள 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாஜகவும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் மும்முரமாக போராடி வருகின்றன.

இந்தநிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். குண்டுவெடிப்பால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in