வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் நடிகர் நாகேந்திர பிரசாத்
நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் நடிகர் நாகேந்திர பிரசாத்

25 லட்ச ரூபாய் கொடுத்து லீசுக்கு சென்ற வீட்டை பூட்டி வெல்டிங் வைத்துவிட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக பிரபல நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா சகோதரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தரணி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் வாடகைக்கு வீடு தேடிவந்துள்ளார். அப்போது, தேனாம்பேட்டை ஜெயம்மாள் தெருவில் வசிக்கும் பிரபல நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவாவின் சகோதரருமான நடிகர் நாகேந்திர பிரசாத் என்பவரது வீடு காலியாக இருப்பதை பார்த்துள்ளார். பின்னர் வீட்டை லீசுக்காக கேட்க வேண்டி நாகேந்திர பிரசாத்தை தொடர்பு கொண்ட நிலையில் அப்போது பேசிய அவரது மனைவி ஹேமா பிரசாத் எங்கள் வீட்டை எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்திடம் கேர் டேக்கர் ஆக கொடுத்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தில் லீசுக்கான தொகை 25 லட்சம் ரூபாய் கொடுக்குமாறும், அவர்கள் நாகேந்திர பிரசாத்திற்கு மாதம் ரூபாய் 36,000 வீதம் இரண்டு வருடத்திற்கு கொடுத்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ள நாய்
வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ள நாய்

இதனையடுத்து விக்னேஷ், நாகேந்திர பிரசாத் மனைவி கூறியது போல் எஸ்டிஎஸ்கே நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து லீசுக்கான தொகை 25 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கேர்டேக்கராக செயல்பட்டு வந்த அந்நிறுவனம் நாகேந்திர பிரசாத்திற்கு ஒரு வருடம் மட்டும் வாடகை தொகையை கொடுத்து ஏமாற்றிவிட்டு அதன் பின்னர் நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று விக்னேஷ் குடும்பத்துடன் வெளியே சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள் விக்னேஷ் வீட்டை வெளிப்புறம் பூட்டி திறக்காதவாறு வெல்டிங் வைத்து சென்றனர். பின்னர் விக்னேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி வெல்டிங் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினருடன் வீடு இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, விக்னேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நாகேந்திர பிரசாத் மனைவி கூறியதால் எஸ்டிஎஸ்கே நிறுவனத்தில் லீசுக்காக 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர் நாகேந்திர பிரசாத்தை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர். அதற்காக என்னை கடந்த ஒரு வருடமாக வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் நாகேந்திர பிரசாத் மிரட்டி வருகிறார். இது தொடர்பாக தேனாம்பேட்டை மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது தனது வீட்டை பூட்டி வெல்டிங் வைத்து விட்டு சென்றுள்ளனர். மேலும் நாயை உள்ளே வைத்து பூட்டியுள்ளதால் உணவில்லாமல் தவிக்கிறது. உடனடியாக போலீஸார் தலையீட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக நாகேந்திர பிரசாத்திடம் கேட்ட போது, தனக்கும் விக்னேஷுக்கும் எந்த தொடர்புமில்லை. தன் பெயரை கெடுக்கும் நோக்கில் விக்னேஷ் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in