"தமிழகத்தில் விசைத்தறி, ஜவுளி தொழில்கள் வீழ்ச்சிக்கு பாஜகவின் கொள்கைதான் காரணம்" என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜகவை பொறுத்தவரை, தமிழகத்தில் தோற்றாலும் டெல்லியில் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் பெரிய நிறுவனங்களை, தொழிலதிபர்களை மிரட்டி வருகின்றனர். பாஜகவின் அண்ணாமலையை பொருத்தவரை, வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
மத்தியில் பாஜக ஆட்சி இருந்த போதிலும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் விசைத்தறி, ஜவுளி தொழில்கள் வீழ்ச்சிக்கு காரணம் பாஜகவின் கொள்கைதான். எந்த திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தாமல் தற்போது தேர்தலை முன்னிட்டு வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். கோவையில் தேர்தல் கள நிலவரம் வேறு மாதிரியாக இருந்தபோதிலும் பாஜகவினர் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறுகின்றனர்.
அதிமுகவின் தொண்டர்கள் விரும்பாததால், பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் வெளியேறினார் என்று கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தடுமாறுகிறார். பாஜகவின் ஆட்சி, எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலை என்பதை அறியாமல் பேசுகிறார்.
பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அவர் இதுவரை கூறவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஆதரிக்கிறார் என்று அர்த்தம். தற்போது, திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு ஒரு பொது எதிரியாக மோடி உள்ளார். இந்த தேர்தலில் பாஜகவை தமிழகத்திலிருந்து வீழ்த்துவோம் எனத் தொண்டர்கள் தெளிவாக உள்ளனர். தமிழக நலன் கருதி தேர்தலில் ஒற்றுமையாக, மோடிக்கு எதிராக ஓட்டு என்றால் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில்லை. கேரளாவில் பாஜகவிற்கு வெற்றி பெற வாய்ப்பு இல்லை. இரண்டாவது இடத்திற்கு பாஜக வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அங்கு தனித்து நிற்கின்றனர். மேற்குவங்கத்திலும் பாஜக வெற்றி பெறாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 400 க்கும் மேற்பட்ட இடங்களை வெற்றி பெறுவதாக பாஜக கூறுவது உண்மை இல்லை" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி!
பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!
நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!
தேர்தல் திருவிழா.. பணம், நகை, மது, சேலை, லேப்டாப்... ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!
அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்