ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 35 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. இது வரலாற்றில் புதிய உச்சமாகும்.
தங்கத்தின் விலை கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து இடைவிடாமல் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கிராமிற்கு 100 ரூபாய், 50 ரூபாய் என தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் கிராமிற்கு சுமார் 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தேர்தல் காலம் என்பதால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததே இந்த தொடர் விலை உயர்வுக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்து வந்தனர்.
இன்று வர்த்தகம் துவங்கிய போது தங்கத்தின் விலை மீண்டும் உயரத் துவங்கியது. இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 35 ரூபாய் அதிகரித்து 6,250-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.280 உயர்ந்து 50,000 ரூபாயை எட்டியது. இது இந்திய வரலாற்றில் தங்கத்தின் அதிகபட்ச விலையாகும். இதனால் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் ஒரு சவரன் நகை வாங்க மக்கள் 56 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருக்கும்.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால், மக்கள் வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வைர நகைகளை வாங்க ஆர்வம் காட்டுவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஒரு கிராம் வெள்ளி 30 பைசா உயர்ந்து 80 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 80,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!
முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!