7 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து?
திருவண்ணாமலையில் 7 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் 126 நாட்களுக்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள், விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, காவல் துறையினர் தடையை மீறி பேரணி, சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அத்திபாடி கிராமத்தில் வசிக்கும் அருள் ஆறுமுகம் (45), விவசாயிகளான செய்யாறு வட்டம் தேத்துறை கிராமத்தில் வசிக்கும் பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தில் வசிக்கும் தேவன் (45), மணிப்புரம் கிராமத்தில் வசிக்கும் சோழன் (32), மேல்மா கிராமத்தில் வசிக்கும் திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தில் வசிக்கும் மாசிலாமணி (45), குரும்பூர் கிராமத்தில் வசிக்கும் பாக்கியராஜ் (38) ஆகிய 7 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று உத்தரவிட்டார்.
இதனிடையே, விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!
பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!
விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!
வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!
குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!