ஆளுநர் கையால் பட்டம் வாங்க மாட்டோம்: பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்!

பேராசிரியர்கள்
பேராசிரியர்கள்

"ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா.சுரேஷ், பேரா. சி.ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்" என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்பு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை பொன்முடி அதிரடியாக அறிவித்தார். மேலும் மதுரை வரும் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பட்டங்கள் பெற்றனர்.

அதே நேரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ் குமார் ஆகியோர் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், "விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா.சுரேஷ், பேரா. சி.ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in