முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில், முரசொலி அறக்கட்டளை மீது தேசிய பட்டியலின ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முரசொலி அறக்கட்டளை சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால், பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி, முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேசிய பட்டியலின ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீடு வழக்கு குறித்து தேசிய பட்டியலின ஆணையம், புகார்தாரர் சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், சீனிவாசன் அளித்த புகார் மீது தேசிய பட்டியலின ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!
தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!