20 வருடங்களாக ஐபோன் பயன்படுத்துகிறேன்; இப்போது ஏன் எச்சரிக்கை... சிவசேனா எம்.பி கேள்வி!

பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி

20 வருடங்களாக ஐபோன் பயன்படுத்துவதாகவும், இப்போது மட்டும் ஏன் எச்சரிக்கை வருகிறது எனவும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி கேள்வியெழுப்பியுள்ளார்.

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த (யுபிடி) பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது தொலைபேசி மற்றும் மின்னஞ்சலை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதே குற்றச்சாட்டை மேலும் சில எம்.பி.க்கள் முன்வைத்துள்ளனர்.

தங்களின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை மத்திய அரசு உளவு பார்ப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எக்ஸ் வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மொபைலில் இருக்கும் தகவல்களை ‘ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்’ (State Sponsored attackers) திருட முயற்சிப்பதாக திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் பவான் கேரா, சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா எம்பி, தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகியோருக்கு ஆப்பிள் நிறுவனம் வார்னிங் மெசேஜ் அனுப்பியிருக்கிறது. இதை பலரும் தங்களின் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

இதையடுத்து, இந்த அச்சுறுத்தல் தொடர்பான சில அறிவிப்புகள் தவறானதாக இருக்கலாம் (some may be false alarms) அல்லது சில தாக்குதல்கள் கண்டறியப்படாமலும் இருக்கலாம் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேசிய சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “நான் 20 வருடங்களாக ஐபோன் பயன்படுத்துகிறேன். அப்போதெல்லாம் வராத குறுஞ்செய்தி தற்போது வந்துள்ளது ஏன்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்

மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் ஐ.டி., அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஆப்பிள் அனுப்பிய இ-மெயிலில் தெளிவான தகவல்கள் இல்லை; அவர்கள் எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளனர்; ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் இது தெளிவற்றது; நிர்ப்பந்தமான விமர்சகர்களின் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என, ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது; இதுபோன்ற அறிவுரைகள், 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன; நாட்டின் வளர்ச்சியை பார்க்க முடியாதவர்கள் நாசகார அரசியல் செய்கின்றனர் என்றார்.

பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்கள் பலரது ஆப்பிள் போன்கள் 'ஹாக்' செய்யப்படுகிறது. முன்பு, நான் நம்பர் 1 பிரதமர் மோடி என்றும், நம்பர் 2 அதானி என்றும், நம்பர் 3 அமித் ஷா என்றும் நினைத்தேன், ஆனால் இது தவறு. நம்பர் 1 அதானி, நம்பர் 2 பிரதமர் மோடி மற்றும் நம்பர் 3 அமித் ஷா. இந்திய அரசியலை நாங்கள் புரிந்து கொண்டோம், இப்போது அதானி தப்பிக்க முடியாது. திசைதிருப்பும் அரசியல் தற்போது நடக்கிறது” என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in