விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக இன்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ள நிலையில், மக்களவை தேர்தல் முடிவதற்கு முன்பாக விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பாப்பு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி எம்எல்ஏ-வாக பதவி வகித்து வந்தவர் திமுகவைச் சேர்ந்த புகழேந்தி. கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழுப்புரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 6-ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்றைய தினமே, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள போதும், நாடு முழுவதும் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் கடைசிகட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்பாகவே இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேசமயம் போதிய அவகாசம் இல்லாததால் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை விரைவில் தேர்தல் ஆணையம் வெளியிடலாம்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!
மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!