’அண்ணாமலையுடன் சந்திப்பா...? அதெல்லாம் நம்பாதீங்க...’ அடித்துச் சொல்கிறது தேமுதிக!
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இன்று காலை முதல் செய்திகள் வெகுவேகமாக பரவிய நிலையில் அதனை தேமுதிக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க அண்ணாமலை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், பாமக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் இருந்து வந்தது.
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை ஈடுபட உள்ளதாக பத்திரிக்கை ஒன்றில் இன்று காலை செய்தி வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இந்நிலையில் தான் இதனை தேமுதிக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்;- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடும் பத்திரிக்கையை கண்டிக்கிறேன்.
இதுபோன்ற செய்தியை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும். அதுவரையிலும் இதுபோன்ற வதந்திகளை பரப்பும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!