அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளாரா அமைச்சர் எ.வ.வேலு? அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி நிர்வகிக்கும் அறக்கட்டளை அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொறியியல் கல்லூரி கட்டியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாத்தூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள திருவண்ணாமலை சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை ஆக்கிரமித்து, பொறியியல் கல்லூரி கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமித்த நிலத்திற்கு பட்டா வாங்கி கல்லூரி தொடங்க அனுமதி பெற்றுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதால் அரசு நிலத்தை வாங்கி அதில் கல்லூரி கட்டியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

மேலும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதால், கல்லூரி கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்ததாகவும், அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.உமா மகேஸ்வரி ஆஜரானார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இதனையடுத்து, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in