முகமது அசாருதீன்
முகமது அசாருதீன்

காங்கிரஸ் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு... ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் களமிறங்கும் கிரிக்கெட் ஜாம்பவான்!

தெலங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நாடு முழுவதும் ஐந்து மாநில தேர்தல் ஜூரம் பிடித்துள்ளது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 5 மாநிலங்களில் ஒரே தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக களம் காண்கின்றன. மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

முகமது அசாருதீன்
முகமது அசாருதீன்

அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 45 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அசாருதீன் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு  அசாருதீன் நன்றி தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ள அசாருதீன், கடவுளின் ஆசீர்வாதத்துடன் தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நவம்பர் மாதம் 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் நவம்பர் 7-ம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மிஜோரம் மாநிலத்தில் நவம்பர் மாதம் 7-ம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17-ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in