மேற்கு வங்க மாநிலம், பூபதி நகர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, அம்மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 தலைவர்களுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கிழக்கு மேதினிப்பூர் மாவட்டம், பூபதி நகரில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரது வீட்டில், கடந்த 2022-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பூபதி நகருக்கு சென்றனர். அப்போது, என்ஐஏ அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதில் ஒரு அதிகாரி காயமடைந்ததோடு, அவர்கள் சென்ற வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பதிலளித்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, என்ஐஏ அதிகாரிகள் அத்துமீறி, கிராம பெண்களின் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அவர்கள் தான் கிராமவாசிகளை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் கடந்த இரு நாள்களாக அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பூபதி நகர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களான மனாப் குமார் கரயா, சுபீர் மைத்தி மற்றும் நப குமார் பாண்டா ஆகிய மூவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் மூவருக்கும் கடந்த வாரமே சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், அப்போது அவர்கள் ஆஜராகவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், பூபதி நகர் குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட இருவர், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!
மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!