மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்பட 6 பாஜக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் ஷேக். இவரும், இவரது கூட்டாளிகளும் அப்பகுதியினரிடம் பலவந்தமாக நிலங்களை கைப்பற்றியது, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதை கண்டித்து சந்தேஷ்காலியில் ஏராளமான பெண்கள் கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தினர்.
ஏற்கெனவே, பொது விநியோக திட்ட ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக்கின் வீட்டுக்கு சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் தாக்கினர். இந்த வழக்கில் கடந்த மாதத்திலிருந்து ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, பாஜக எம்எல்ஏக்கள் சந்தேஷ்காலி விவகாரத்தை எழுப்பி கோஷமிட்டனர்.
பாஜக எம்எல்ஏக்கள் அவையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவைக்குள் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், சிவப்பு நிறத்தில் 'நாங்கள் சந்தேஷ்காலியுடன் இருக்கிறோம்' என வாசகங்கள் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்திருந்தனர்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபந்தேப் சாட்டர்ஜி, பாஜக எம்எல்ஏ-க்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைக்க, சபாநாயகர் பிமன் பானர்ஜி அனுமதித்தார். அதன்பேரில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பாஜக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, எம்எல்ஏ-க்கள் அக்னிமித்ரா பால், மிஹிர் கோஸ்வாமி, பங்கிம் கோஷ், தபசி மொண்டல் மற்றும் சங்கர் கோஷ் ஆகியோர் நடப்பு கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்கள் அல்லது 30 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!
தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!