தம்பியை அந்த கல்லூரிக்கு அனுப்பாதீங்க... அதிர்ச்சி கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தற்கொலை

தம்பியை அந்த கல்லூரிக்கு அனுப்பாதீங்க... அதிர்ச்சி கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தற்கொலை

தெலங்கானாவில் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வந்த மாணவர், கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த அழுத்தத்தால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்த வைபவ் என்ற மாணவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று மாணவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது அறையில் சோதனையிட்டபோது, தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், தான் பயின்று வரும் கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் ஒருவர் தன்னை அதிக மதிப்பெண்கள் எடுக்குமாறு டார்ச்சர் செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதே கல்லூரிக்கு தனது இளைய சகோதரனை அனுப்ப வேண்டாம் எனவும், கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கக் கூறி அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in