மேற்கு வங்க மாநிலத்தில் தலைமறைவாக உள்ள திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 மாவட்டம், சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் ஷேக். திரிணமூல் காங்கிரஸ் பிரமுகரான இவரது வீட்டுக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஷேக்கின் ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஷாஜகான் ஷேக் தலைமறைவாகிவிட்டார். அவரை மேற்கு வங்க காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளது. கடந்த சில நாள்களாக சந்தேஷ்காலி பகுதி பெண்கள், ஷாஜகான் ஷேக் மீது பலாத்கார குற்றச்சாட்டை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்களால் பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகள், குறிப்பாக பெண்கள் சந்தேஷ்காலியின் சில பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தடி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பேசும் ஒரு வீடியோவில், “திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆண்கள் வந்து வீடுகளுக்குள் நுழைந்து ஆய்வு செய்வார்கள். வீடுகளில் உள்ள பெண்களில் யார் இளமையாக இருக்கிறார்கள் என பார்த்து, அவர்களை கட்சி அலுவலகத்துக்கு தூக்கிச் சென்று விடுவார்கள். தாங்கள் திருப்தியடையும் வரை அந்தப் பெண்ணை அங்கேயே வைத்திருப்பார்கள்" என குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி (பாஜக) தலைவரான சுவேந்து அதிகாரி கூறுகையில், “ஷேக் ஷாஜகானும், அவரது கும்பலும் ஒரு பயங்கரவாத ஆட்சியை நடத்தினர். அவர்களால் எஸ்சி, எஸ்டி சமூக பெண்களின் கண்ணியம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜன்ஜாதியாக்கள், பழங்குடியினருக்குச் சொந்தமான நிலங்களை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர்” என்றார்.
இதற்கிடையே பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக போராட்டம் நடத்திய பெண்களை அம்மாநில மகளிர் ஆணையத் தலைவர் லீனா கங்கோபாத்யாய், மற்றொரு உறுப்பினர் சந்தேஷ்காலிக்கு நேரில் வந்து புகார் தெரிவித்த பெண்களுடன் விசாரணை நடத்தினர். இதேபோல், சந்தேஷ்காலி பாலியல் கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து 48 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம், மேற்கு வங்க அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!
தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!