ரூ.1,00,000 அபராதம்... மன்சூர் அலிகான் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள்!

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

நடிகைகளை விமர்சித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ் தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மன்சூர். ஆனால், உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை மன்சூர் அலிகான் பேசி இருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய்  மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, “நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து மன்சூர் அலிகானின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மன்சூர் அலிகான் இரண்டு வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

இந்த நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும்?” என கேள்வி எழுப்பியதுடன் ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர். 

“தனக்கு விதிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி தனி நீதிபதி முன்பாக மன்சூரலிகான் வலியுறுத்தலாம். அல்லது அபராதத்தைக் கட்ட முடியுமா, முடியாதா என்று தெரிவிக்கலாம்” என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


தினமும் 12 மணி நேர வேலை... வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு?

ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு ரூ.110 கோடி நன்கொடை... அள்ளித் தந்த முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர்!

முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

வீடு புகுந்து மனைவி, காதலன் வெட்டிக் கொலை: முன்னாள் கணவர் வெறிச்செயல்!

பரபரப்பு...வாகனம் ஏற்றி விவசாய சங்க தலைவர் கொலை?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in