திருப்பத்தூர் அருகே தீப்பிடித்த கரும்புக்காட்டை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள கல்லரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரும்பு அறுவடைக்கு தயாரான நிலையில், அறுவடைக்கு ஆள் கிடைக்காததால் கரும்பை அறுவடை செய்யாமல் காட்டில் விட்டிருந்தார். இந்நிலையில் திடீரென கரும்புக்காட்டில் தீப்பிடித்து எரிந்தது. காதர் பாஷாவும் அவரது குடும்பத்தினரும் தீயை அணைக்க முயன்ற போதும், தீயை கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இருப்பினும் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக தீயணைப்பு வாகனம் அங்கு வந்துள்ளது. வந்த 5 நிமிடத்திலேயே வாகனத்தில் இருந்த தண்ணீர் முடிந்துவிட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி 3 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் காதர் பாஷாவும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி பார்ப்போரை கலங்க செய்தது.
இதனிடையே தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணிக்கு தயாராக வராமல், தண்ணீரின்றி வந்ததே முழு காடும் எரிந்து நாசமானதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வேளாண் நிலங்களில் தீ ஏற்பட்டால், அதனை அணைக்க உரிய முன்னேற்பாடுகளுடன் தீயணைப்பு வாகனங்களை எடுத்து வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!
தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!