மூத்த அரசியல்வாதி, தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெற இருக்கும் நிலையில் இயக்குநர், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர், முன்னாள் முதலமைச்சரின் வலது கரமாகத் திகழ்ந்தவர் மூத்த அரசியல்வாதி ஆர்.எம். வீரப்பன் (98). மூச்சு திணறல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1963ம் ஆண்டில் எம்ஜிஆரின் சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார்.
அவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் அறிக்கையை வெளியிட்டார். அதில், "அறநிலையத்துறையை ஆண்ட மனிதர். சதம் தொட்ட தனித்துவமானவரின் மறைவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரத்தின் ஆயுள் போன்றது. திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து, எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பல நட்சத்திரங்களுடன், தமிழ்த்திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்து, சிறந்த தயாரிப்பாளராக, அவர் தலைமையில் பல ஆச்சரியங்களை நிகழ்த்திக் காட்டியது சத்யா மூவிஸ். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்தவர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.
ஒவ்வொரு நாளும் வேறொரு நாள் தான். நமக்கான நாளாக நாளை அமைய துளி கூட வாய்ப்பில்லை. ஆனாலும் நம்பிக்கை என்பது மட்டுமே நம்மை வாழச் சொல்கிறது. நாளை என்ற நம்பிக்கையை விதைத்துச் சென்ற தங்களின் வாழ்க்கையை முன் வைத்துக் கொள்கிறோம்.நிகழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் எங்களை நினைவுபடுத்திய சத்யா மூவிஸைப் போல உங்களின் நினைவுகளும் நீடித்திருக்கும். வாழ்ந்திருங்கள் ... எத்தனை வருடங்கள் கடந்தாலும்" என உருக்கமாகக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
மாம்பழமா, மைத்துனரா?: கடலூரில் கரையேறப் போவது யார்?
பரபரப்பு... மதுரையில் மு.க அழகிரியின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி!
உத்தராகண்டில் சோகம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் பலி!
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!