பரபரப்பு... மதுரையில் மு.க அழகிரியின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி!

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரி பண்ணை வீடு
அழகிரி பண்ணை வீடு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மதுரையில் வசித்து வருகிறார்.  ஒரு காலத்தில் தென்மாவட்ட திமுகவின் முக்கிய சக்தியாக விளங்கிய அழகிரி,  ஸ்டாலின் தலைவரான பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவருக்கு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில்  பண்ணை வீடு உள்ளது.

சுமார் 20 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் தென்னை தோட்டமும் அதன் நடுவே பண்ணை வீடும் அமைந்துள்ளது. இங்கு மு.க. அழகிரி தனது குடும்பத்துடன் சென்று ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மற்ற நேரங்களில் காவலாளி மற்றும் பண்ணைக்கு வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் மு.க.அழகிரியின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து சில மர்மநபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். ஏதோ சத்தம் கேட்டதால்  சுதாரித்துக் கொண்ட வீட்டின் காவலாளி சத்தம் கேட்ட திசையில் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்களின் நடமாட்டம் தெரிந்ததால் அவர் கூச்சலிட்டுள்ளார்.

காவலாளியை பார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறி தப்பி ஓடியுள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இதையடுத்து பண்ணை வீட்டு மேலாளர் குட்டி சார்பில் சம்பவம் தொடர்பாக காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

அதன்பேரில் போலீஸார் விசாரணையை தொடங்கி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in