அரசுப் பேருந்தில் காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநருடன் காவலர் ஆறுமுகப்பாண்டி சமாதானமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசு பேருந்தில் ஏறிய காவலர் ஆறுமுகப்பாண்டி, "தானும் ஒரு அரசு ஊழியர் தான். அரசுப் பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கட் எடுக்க தேவையில்லை" என்று நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு, "அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வேண்டும் என்றால் வாரண்ட் வேண்டும். வாரண்ட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் கண்டிப்பாக எடுக்க வேண்டும்" என்று நடத்துநர் சொல்லியும் காவலர் கேட்கவில்லை. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.
இது சர்ச்சையான நிலையில், 'அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும்" என்று போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்தியது.
இதனால், காவல்துறைக்கும், போக்குவரத்துதுறைக்கும் மோதல் வெடித்தது. நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பது, சரியான சீருடை அணியவில்லை போன்ற காரணத்திற்காக அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பது என போக்குவரத்து காவலர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்த மோதல் போக்கை தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உட்பட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
மேலும, "சட்ட விதிமீறல்களை காரணம் காண்பித்து அபராதம் விதிப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து வருவதால், தமிழக முதல்வர் இதற்கு சரியான தீர்வு அளிக்க வேண்டும்" என்று தமிழக முதல்வருக்கு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதினர். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது.
இதையடுத்து, இன்று தலைமை செயலகத்தில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டியுன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, போக்குவரத்துதுறையினர், காவல்துறையினர் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்நிலையில், அந்த வீடியோவில் உள்ள காவலர் ஆறுமுகப்பாண்டி மற்றும் நடத்துநர் இருவரும் சமாதானம் செய்துக் கொள்ளும்படியான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், அரசு பேருந்து நடத்துநர், தங்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறினேன். உங்கள் தரப்பு விசயத்தை சொன்னீர்கள். எங்கள் போக்குவரத்து கழக தரப்பு நியாயத்தை நான் சொன்னேன். அதை யாரோ வீடியோ வெளியிட்டு, இரண்டு துறைகளுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தி விட்டனர். நம்ம இரண்டு துறைகளும் சுமூகமாக செயல்பட வேண்டும். நண்பர்களாக பணியாற்றுவோம்" என்று பேருந்து நடத்துநர் பேசுவதும், அதை காவலர் ஆறுமுகப்பாண்டியன் ஆமோதிப்பதும், இறுதியில் இருவரும் கட்டி அணைத்து, டீ குடிப்பது போன்று வீடியோ முடிகிறது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து துறை - காவல்துறை இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!
நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்
ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!