
நெடுஞ்சாலைத்துறையில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள பணியாளர்களின் பணியிடங்கள் அனைத்தும் கலைக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு அத்துறை பணியாளர்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை மூலமாக தமிழ்நாட்டில் சுமார் 60 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் பராமரிக்கவும், புதுப்பிக்கவும் படுகிறது. அந்த துறையில் சுமார் 60 வகையான பிரிவுகளில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். கடந்த 2010ல் திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை மறு சீரமைப்பு என்ற நடவடிக்கையின் மூலம் சுமார் 1000த்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் கலைக்கப்பட்டது.
இறுதியாக அரசாணை 293 மற்றும் 185 மூலம் நிர்வாகப் பணியிடங்கள் 5300 மற்றும் பொறியியல் பணியிடங்கள் 1600 என மொத்தம் 7000 பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதுபோக திட்டம் சார்ந்த பணியாளராக சாலை ஆய்வாளர், சாலை பணியாளர் என 17 ஆயிரம் பணியிடங்கள் தனியாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் குரூப் 4ல் சில நூறு பணியிடங்களும், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தலைமைப் பொறியாளர் சார்பில் காலி பணியிடம் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக காலியாக இருக்கும் அந்த பணியிடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டால் அந்த பணியிடங்களை கலைத்து விட அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதனால் சுமார் 60 வகையான பணியிடங்களை கொண்டுள்ள நெடுஞ்சாலைத்துறையில் இனி பொறியாளர் உள்ளிட்ட ஒரு சில பணியிடங்கள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டு, ஒட்டுமொத்தமாக பணியாளர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்படும் என்று நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!