கலக்கத்தில் திருவாரூர் மாவட்ட மக்கள்! 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல்... ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

திருவாரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சலால் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் அரசு மருத்துவமனை
திருவாரூர் அரசு மருத்துவமனை

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35 பேர் காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த 4 பேரில், 65 வயது மூதாட்டி ஒருவர் அவசர சிகிச்சை பிரிவி்ல் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹெச்1என்1 ஸ்வைன் ஃபுளூ வைரஸ்
ஹெச்1என்1 ஸ்வைன் ஃபுளூ வைரஸ்

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் கூறுகையில், "பன்றிக்காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை. பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. எனவே நோயாளிகள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்" என்றார்.

திருவாரூர் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் தவிர, மன்னார்குடியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இம்மருத்துவமனையில் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு தனி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in