தீபாவளி குறித்து அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு... பியூஸ் மானுஷின் மனுவை விசாரிக்க அரசு ஒப்புதல்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை தொடர்பாக பியூஸ் மானுஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஸ் மானுஷ், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ”கடந்த தீபாவளியின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக தீபாவளி என்று பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கின்றன என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரித்த போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் அர்ஜுன் கோபால் என்பவர், என்பது தெரியவந்தது.

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்
சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்

அவரது பின்புலம் பற்றி விசாரித்த போது அவர் இந்து சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அண்ணாமலை வேண்டுமென்றே இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு பொய்யான தகவலை பரப்பி விட்டு இருக்கிறார்.

எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். ஆனால் காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர் சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சேலம் நீதிமன்ற வளாகம்
சேலம் நீதிமன்ற வளாகம்

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் அனுமதியை வாங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இந்த மனுவை அரசுக்கு அனுப்பி வைத்தார்.

அரசு வழக்கறிஞர்கள் பரிசீலனை செய்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்கான காரணங்கள் இருக்கின்றன, எனவே, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம் எனக் கூறி கடந்த 18-ம் தேதி அனுமதி அளித்தனர். இந்த வழக்கு அடுத்த மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in