மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. அதனால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. டீ போடுவது, தோசை சுடுவது, பஜ்ஜி போடுவது, வயலில் நாற்று நடுவது, மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்வது என விதவிதமான உத்திகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், கோடை வெயிலை விட தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.
இந்நிலையில், திமுக வேட்பாளர்கள், முன்னணி அரசியல் தலைவர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப் படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ' தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சி தலைவர்களின் செல்போன் உரையாடல்களும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இது மத்திய அரசு கொண்டுள்ள சட்டத்தின் விதியை மீறிய செயல்.
தனிப்பட்ட சுதந்திரத்தை கெடுக்கும் வகையில், யாருடையை செல்போன் உரையாடல்களையும் ஒட்டுல் கேட்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளன. இதை எல்லாவற்றையும் மீறி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் முகமைகள் சட்டவிரோத மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்டு வருகின்றன. இதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரமான முறையில் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும்' என்று கோரியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!
மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!