மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைத் திறப்பதற்கு முன்னர் பயபக்தியோடு படையலுடன் பூஜை போட்ட மதுரை தேர்தல் அதிகாரிகளின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை ரேஸ் கோர்ஸ் அருகே உள்ள மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை அதிகாரிகள் இன்று மதியம் தொடங்கினர்.
இதற்காக வந்த அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன் இருந்த விநாயகர் கோயிலில் முதலில் பூஜை போட்டனர். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், சுண்டல் ஆகியவற்றை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் அங்கிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் அங்கிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு முன்பாக சென்றவர்கள் அங்கும் அர்ச்சகரைக்கொண்டு பூஜை போட்டனர். அப்போது தேர்தல் அதிகாரிகள், நல்லபடியாக தேர்தல் நடந்து முடிய வேண்டும் பிள்ளையாரே என்று வேண்டிக் கொண்டனர். அதனையடுத்து அறைக் கதவுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பின்னரே கதவு திறக்கப்பட்டது. அதன் பின்னர் மண்டல வாரியாக இயந்திரங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பூஜை போட்ட அதிகாரிகளின் இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி
இதையும் வாசிக்கலாமே...
கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!
முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?
தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!
பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு