“வழக்கிலிருந்து தப்புவதற்காகபாஜகவுக்கு ரூ170 கோடிக்கு தேர்தல் பத்திரம் செலுத்தினார் ராபர்ட் வதேரா” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். ராகுல் காந்தியுடனான பரஸ்பர மோதலின் போது பினராயி விஜயன் இவ்வாறு குற்றம் சாட்டினார்.
தேசிய அளவில் ‘இந்தியா கூட்டணி’ என்ற போர்வையில் குலாவிக்கொள்ளும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், கேரள மாநிலத் தேர்தல்களில் எதிரும் புதிருமாக நிற்கின்றன. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கும் இந்த இரு கட்சிகளும், கேரள தேர்தல் களத்தில் கடும் தாக்குதலை பரஸ்பரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வகையில் நேற்று மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கேள்விகள் எழுப்பிய ராகுல் காந்தி, “கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பினும், அவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேட்டிருந்தார்.
இதற்கு இன்றைய தினம் கோழிக்கோடு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பினராயி விஜயம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இடதுசாரிகள் வழக்கு விசாரணைக்கோ, சிறைக்கோ அஞ்சியவர்கள் அல்ல. அல்லது அசோக் சவான் போல அழுதவர்கள் அல்ல. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி இடதுசாரி தலைவர்கள் மீது அடக்கு முறையை ஏவினார்; அவர்களை சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் அடைத்தார். ஆனால் அதற்காக இடதுசாரிகள் அஞ்சவோ, கவலைப்படவோ இல்லை” என தாக்கியிருந்தார்.
முன்னதாக, ‘ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியிலேயே போட்டியிட வேண்டியதுதானே’ என்று பினராயி விஜயன் சீறியிருந்தார். கடந்த தேர்தலில் அமேதி, வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதியில் தோல்வியை தழுவினார். எனவே இம்முறை கேரளத்தின் வயநாடு தொகுதியில் மட்டும் அவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடதுசாரிகளின் வேட்பாளர் ஆனி ரஜா களமிறங்கி உள்ளார்.
ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை அடியோடு இடதுசாரிகள் விரும்பவில்லை. இது உட்பட மேலும் பல காரணங்களை முன்வைத்து காங்கிரஸ் - இடதுசாரிகள் இடையே மோதல் முட்டிக்கொண்டுள்ளது. தற்போது ராகுலுக்கு எதிராக சீறியிருக்கும் பினராயி விஜயன், ராபர்ட் வதேரா குறித்தும் குற்றம்சாட்டியுள்ளார்.
சோனியா காந்தி மருமகனும், பிரியங்கா காந்தி கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வதேரா, ‘தனது நிறுவனத்தின் மீதான மத்திய அரசின் விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக ரூ170 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை பாஜகவுக்கு செலுத்தி உள்ளார்’ என்றொரு பகீர் குற்றச்சாட்டை பாய்ச்சி உள்ளார். இந்த வகையில் கேரள மாநிலத்தை பொறுத்தளவில், காங்கிரஸ் - இடதுசாரிகள் இடையிலான மோதல் நித்தம் வளர்ந்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!
கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!
பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!
ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!
பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!