வாய்ஜாலம் பேசுபவர்கள் பேச்சில் மயங்கி விடாதீர்கள் எனவும், பேச்சு செயல் ஆகாது எனவும் பாஜகவினரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
கோவை சூலூர் பகுதியில் கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,” 80 ஆண்டுகளுக்கு முன்னால் என் தந்தை எந்த காரணத்திற்காக காந்தியின் பின்னாலும் காமராஜர் பின்னாலும் சென்றாரோ அதே காரணங்களுக்காக நானும் புறப்பட்டிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி. சிறைப்பட்டு, செக்கிழுத்து, வாழ்விழந்து மீட்டுத் தந்த சுதந்திரம், வெள்ளையரை வெளியேற்றிய அந்த தியாகம் இன்று இந்த கொள்ளையர்கள் கையில் நாட்டை கொடுக்கவா? ” என்றார்.
மேலும், “வாய்ஜாலம் பேசுபவர்கள் பேச்சில் மயங்கி விடாதீர்கள். பேச்சு, செயல் ஆகாது. மத்திய பாஜக அரசு மீது என்ன கோபம் என்று என்னை கேட்கிறார்கள். எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நாம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு வழி செய்கின்ற அனைவருக்கும் வணக்கம் சொல்வோம். வந்தனம் சொல்வோம். அதற்கு மாறாக செய்பவர்கள் நமக்கு விரோதிகள் கூட அல்ல. வேண்டாதவர்கள். 97 கோடி பேர் வாக்களிக்க போகிறார்கள். இது இரண்டாவது சுதந்திரப் போர் என்று கூறினால் மிகையாகாது. 19ம் தேதி நீங்கள் சரியான முடிவு எடுத்தால் நமக்கு ஜூன் 4ம் தேதி சுதந்திர நாள் என்பதை மறந்து விடாதீர்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ 70 வருடம் நாடு முன்னேறி இருக்கிறது என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டை எடுத்தால் கட்சி பாரபட்சம் பாராமல் படிப்படியாக பல தலைவர்கள் நம்மை முன்னுக்கு கொண்டு சென்ற திராவிட மாடல் இது. திராவிடர்கள் இயற்றிய மாடல் இது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து இதற்கு நிகராக இந்தியாவில் எங்கு தேடிப் பார்த்தாலும் கிடைப்பது கடினம். எல்லோருக்கும் ஒரு சாதனை பட்டியல் உண்டு. ஆனால் யார் பயன் பெற்றார்கள் என்பது தான் முக்கியம்“ என்று தெரிவித்துள்ளார்
இதையும் வாசிக்கலாமே...
ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!
மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!