விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து திமுகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக உறுப்பினர் புகழேந்தியும் தீவிர வாக்குசேகரிப்பில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார்.
நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அதில் புகழேந்தியும் பங்கேற்று இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக உடன் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அவருக்கு சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில் சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவக்குழுவினர் விழுப்புரம் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏற்கெனவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார். இதையடுத்து அவரது மகன் புகழ் செல்வக்குமாருக்கு உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏவின் திடீர் மறைவு, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!
குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!
பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!