முதல்வர் ரூ.508 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார்... அமலாக்கத்துறையின் பகீர் குற்றச்சாட்டு!

பூபேஷ் பகேல்
பூபேஷ் பகேல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் சில தினங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களிடம் இருந்து மாநில முதல்வா் பூபேஷ் பகேலுக்கு ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக அமலாக்கத் துறை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக பேரவைத் தோதல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸும் எதிா்க்கட்சியான பாஜகவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தேர்தலில் இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

இந்த சூழலில், மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களிடம் இருந்து சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை சோதனை

இதுகுறித்து அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'அசிம் தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். இது, தேர்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் அனுப்பப்பட்ட பணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையும், அவரது கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வும் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளன. அவருக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதேவ் சூதாட்டச் செயலியால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம், பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பகிரப்பட்டதாக அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரத்தில், செயலியின் உரிமையாளா்கள் செளரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்பட 14 பேருக்கு எதிராக அண்மையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.15.59 கோடி சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

'சத்தீஸ்கா், ராஜஸ்தான் தேர்தல்களில் பாஜகவின் தோல்வி நிச்சயமாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் தலைவா்களின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில், அமலாக்கத் துறை என்ற கடைசி அஸ்திரத்தை கையிலெடுத்துள்ளாா் பிரதமா் மோடி' என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ், 'மத்திய பாஜக அரசின் தேர்தல் நாடகத்தை மக்கள் அறிவா். மோடியின் அச்சுறுத்தலும் மிரட்டலும் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டுமென்ற மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தும். மக்கள்தான் காங்கிரஸின் கவசம்' என்று குறிப்பிட்டுள்ளாா்.

'சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் ரூ.508 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அவா் உடனடியாக பதவி விலக வேண்டும்' என்று பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான பிரிஜ் மோகன் லால் வலியுறுத்தியுள்ளாா்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in