அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ஏவி சாரதிக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 70 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. இதனால், ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றுவரை கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது. அதற்கு திமுக, அதிமுகவிடம் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த தேர்தல்களை விடக் கூடுதலான தொகுதிகளைக் கேட்டிருப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், இம்முறை திமுகவில் புதிய முகங்கள், ஜூனியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக இளைஞர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதான கட்சிகள் தரப்பில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற உத்தேசப்பட்டியல் உலா வந்து கொண்டுள்ளன. அதில், மிக முக்கியமாக திமுகவின் சீனியரும், தற்போதைய எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு மாற்றாக அரக்கோணத்தில் ஏவி சாரதிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த ஏவி சாரதி சிமெண்ட் மொத்த வியாபாரம், குவாரி பணிகள் ஆகியவற்றைச் செய்து வருகிறார். அதிமுகவின் வர்த்தகப் பிரிவு செயலாளராக இருந்த இவர், திமுகவில் இணைந்தார். அதன் பின் அம்மாவட்டத்தின் திமுகவின் முக்கிய முகமாகவே அறியப்படுகிறார்.
அதோடு, இளைஞரணி மாநாடுகளில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி, உதயநிதி கூறிய, புதியவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், அமைச்சர் காந்தியின் மகன் வினோத்தின் பெயரும் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் பெயரில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, கட்சியினரிடையே நற்பெயர் இல்லாதது என பல காரணங்கள் அடுக்கப்படுகிறது. இதனால், கிளீன் இமேஜ் மற்றும் புதியவர் என்ற அடையாளத்துடன் ஏவி சாரதி களமிறக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.
அதேநேரம், அரக்கோணம் தொகுதியில் பெரும்பான்மை மக்கள் வன்னியர்கள் என்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த ஏவி சாரதியை நிறுத்தினால் கூடுதல் பலமாக இருக்கும் என்று கட்சித் தலைமை திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாமக அந்த தொகுதியில் நிற்கும் பட்சத்தில், இவரே பெஸ்ட் சாய்ஸாகவும் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் நிற்கவில்லை என்றால், அவர் ஓரம்கட்டப்படுகிறாரா அல்லது வேலூர் தொகுதிக்கு மாற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி வேலூர் தொகுதிக்கு அவர் மாற்றப்பட்டால், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் என்ன ஆவார். இதுபோன்ற பல கேள்விகளுக்கான விடை என்ன என்பது விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் வாசிக்கலாமே...
அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!
ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!
ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!
அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!