கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட சுமார் 3.54 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் சார்பில் கண்காணிப்பு நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடாவை தவிர்ப்பது மற்றும் தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர் அருகே உள்ள பெர்க்ஸ் பள்ளி சந்திப்பு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே ஆம்பி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனத்தின் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அதனை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது, உள்ளே தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஊழியர்களிடம் கேட்டபோது, உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலை, அதனை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். அங்கு நகைகள் மதிப்பீடு நடைபெற்றது. அப்போது இந்த நகைகளின் தோராய மதிப்பு சுமார் 3.54 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.‘
அவற்றிற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படுவதாகவும், உரிய ஆவணங்களைக் கொடுத்து அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!
குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!
பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!