வாக்குகளுக்காக அரசியல் செய்யாமல் மக்களின் வளர்ச்சிக்காக பாஜக செயல்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வாக்குகளை சேகரித்தார். பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ''பிரதமர் நரேந்திர மோடியால் உலகம் முழுதும் தமிழ் கலாச்சாரம் பரப்பப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கவும், போற்றப்படவும் வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசினார். தேர்தல் அறிக்கையில் கூட தமிழக கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளர்.
நாடு பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகிறது. சீனாவுக்கு அடுத்து பெரிய முன்னேற்றம் கண்ட நாடாக இந்தியா உள்ளது. 95 சதவீத மொபைல் போன்களை இறக்குமதி செய்த நாம், தற்போது ஏற்றுமதி செய்து வருகிறோம். பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மேம்பட்டு உள்ளதுடன் 21 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின் வலுவான மொபைல் நெட் சேவை இங்கு வழங்கபட்டு வருகிறது. சாதாரண மக்களிடையே கூட டிஜிட்டல் முறையில் UPI பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
95 சதவீத கிராமங்கள் சாலைகள் மூலமாக இணைக்க பட்டுள்ளது. நாடு முழுவதும் விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2016 பிறகு மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் வாக்குகளை பெறுவதற்காக பாஜக அரசியல் செய்வதில்லை. மக்களுக்கு வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்று தான் பாடுபடுகிறோம்.
நாட்டின் பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகள் பெறப்படுகிறது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தமிழகத்திற்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி உள்ளது. ஒரு குடும்ப அரசியல் காரணமாக ஊழல் நிறைந்து தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. ஊழல் செய்த திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து கொண்டு வாக்கு சேகரிக்கிறது. ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். ஊழல் செய்த கட்சிகளை புறக்கணிக்க தயாராகி விட்டனர். தேசிய அளவில் வளர்ச்சியினை கொண்டு வரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
பாஜக எப்போதும் பெண்களை மதிப்பதுடன் உரிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதே சமயம் பெண்களுக்கான உரிய வாய்ப்புகளை இந்தியா கூட்டணி வழங்குவதில்லை. அதனால் தான் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கிறார்கள். அதனால் பெண்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. ஆனால் அதிகாரத்தை பெற வேண்டும் என்று தான் இப்போது கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களால் நாட்டை பலப்படுத்த முடியாது. வாக்காளர்கள் விலை போகாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் வாசிக்கலாமே...
ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!
மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!