முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலையாகி, நலமுடன் இருக்க வேண்டி, கரூர் மாரியம்மன் கோயிலில் அவரது நலம் விரும்பிகள் இன்று அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.1.62 கோடி பணம் மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி பின்னர், திமுகவில் இணைந்து கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சாரானார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை மத்திய அரசின் அமலாக்கத் துறை கையிலெடுத்து, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்தது. மேலும், ஆண்டு ஜூன் மாதம் அவரை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி, ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இச்சூழலில் செந்தில் பாலாஜி, சிறையிலிருந்து விடுதலையாகி நலமுடன் இருக்க வேண்டி, அறம் மக்கள் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கரூர் மாரியம்மன் கோயிலில் இன்று காலை அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பினர் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுதலை பெற வேண்டியும், நலமுடன் இருக்க வேண்டியும், கரூர், திருச்சி, சென்னை மாவட்டங்களில் அறம் மக்கள் கட்சி சார்பில் கோயில்களில் அங்கப் பிரதட்சணம், சிறப்பு பூஜை நடத்த உள்ளோம்.
இதேபோல் பிற மத வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினோம். இன்று கரூர் மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம், சிறப்பு பூஜை செய்துள்ளோம்." என்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை பிரதமராக பதவியேற்கிறார் மோடி... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!
ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!
திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!
பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்