ஆட்சி அமைக்க தகுதியான மேஜிக் எண் 272 என்பதை வெற்றிகரமாக என்டிஏ எட்டியதில், அதற்கு கடும் போட்டி தரும் வகையில் இந்தியா கூட்டணி முன்னேறி வருவது, வாக்கு எண்ணிக்கை பணிகளின் மத்தியில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவுக்காக நாட்டு மக்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றனர். உலகின் மிகப்பெரும் ஜனநாயகத் தேர்தலின் முடிவுக்காக உலக நாடுகளும் உற்று கவனித்து வருகின்றன. இவற்றின் மத்தியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஓரிரு மணி நேரத்தில், என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியினர் இடையே கடும் போட்டிக்கான சூழல் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலின் நிறைவாக மத்தியில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெல்வது அவசியமாகும். இந்த மேஜிக் நம்பரை வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் வெளியாக ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே பாஜக தலைமையிலான என்டிஏ எகிறித் தாண்டியது. இது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை எதிரொலிக்கும் வகையில் அமைந்தது.
ஆனால் பாஜக தலைமையிலான என்டிஏ போக்குக்கு கடும் போட்டி தரும் வகையில் இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது. 9.30 மணியளவில் என்டிஏ 272 என்பதை வெற்றிகரமாக கடந்து 290 என்பதை தொட்டிருந்தது. இதற்குப் போட்டியாக இந்தியா கூட்டணி 225 என்பதை எட்டியிருந்தது. இதர கட்சிகள் சுமார் 20 இடங்களில் முன்னிலை வகித்தன.
என்டிஏ முன்னிலை வகித்தபோதும், கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சொச்ச தொகுதிகளில் பின்னடவை சந்தித்து வருகிறது. அதுவே இந்தியா கூட்டணி கட்சிகள் கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் சுமார் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 2019 தேர்தலில் இந்தியா கூட்டணி உருவாகவில்லை என்றபோதும், பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய எதிர்க்கட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் இவ்வாறு பிரதிபலிக்கிறது.
என்டிஏ - இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிச்சயம் என்பதை முதல் ஒன்றரை மணி நேரத்தில் வெளியான முன்னிலை நிலவரங்கள் தெளிவுபடுத்தி உள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்