நான்கு முனை போட்டி நிலவும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பிரதானமாக திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்சிகள் தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், இடதுசாரிகள், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் தேமுதி, புதிய தமிழகம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. இதேபோல், பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு சிறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.
கடந்த 2016ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலிலிருந்தே அக்கட்சி தனித்து போட்டியிட்டு வருவதோடு, அனைத்துத் தேர்தல்களிலும் பாதிக்கு பாதி வேட்பாளர்களில் பெண்களை நிறுத்தி வருகிறது.
இந்நிலையில் நான்கு முனை போட்டி நிலவி வரும் தமிழகம், புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஓரிடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.
நாம் தமிழர் கட்சியானது தமிழ்நாட்டில் மொத்தம் 8 தொகுதிகளில் 3வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, புதுச்சேரி, தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, நாகப்பட்டினம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் உள்ளதாக வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் வாசிக்கலாமே...
புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்