தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தற்போது முன்னிலை வகிக்கிறது. தொடக்கம் முதலே விருதுநகர் மற்றும் தருமபுரியில் திமுக கூட்டணி பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது திமுக முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. பாஜக கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, ஓபிஎஸ், ஐஜேகே போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
இந்தநிலையில், காலை முதலே தமிழகம், புதுச்சேரியில் உள்ள 38 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியும் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர்.
தற்போதைய சூழலில் தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி தருமபுரியில் திமுக வேட்பாளர் ஆ.மணி 351402 வாக்குகளும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 350045 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அசோகன் 236664 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 52793 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் சௌமியா அன்புமணி 1357 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.
அதேபோல் தற்போதைய நிலவரப்படி விருதுநகரில் மாணிக்கம் தாகூர் 293401 வாக்குகளும், விஜய பிரபாகரன் 285664 வாக்குகளும், ராதிகா 126680 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுசிக் 57765 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரனை விட 7737 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதன் காரணமாக திமுக கூட்டணியே தற்போது தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்