விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அங்கே 5 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இன்று காலை தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கியபோது மாணிக்கம் தாகூர் முன்னிலையில் இருந்தார். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணியபோது, விஜய பிரபாகரன் முன்னிலை பெற்றார்.
மதியம் 12 மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளைக் கடந்து சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இரண்டாவது இடத்தில் மாணிக்கம் தாகூர் ஒரு லட்சத்து 6 ஆயிரம் வாக்குகளுடனும், மூன்றாவது இடத்தில் ராதிகா சரத்குமாரும் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில சுற்றுகளாக மாணிக்கம் தாகூருக்கும், விஜய பிரபாகரனுக்கு இடையே சில நூறு வாக்குகளில் மாறி மாறி முன்னிலை வகித்தனர். தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, மாணிக்கம் தாகூர் 208839 வாக்குகளும், விஜய பிரபாகரன் 203002 வாக்குகளும், ராதிகா 83845 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுசிக் 40765 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரனை விட 5837 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்