பாஜகவின் பெருநம்பிக்கைக்குரிய குஜராத் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம், வழக்கம்போலவே அக்கட்சியை ஏமாற்றாத வகையில் எகிறி வருகிறது.
குஜராத்தின் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளில் 25-ல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே, பாஜகவின் முகேஷ் தலால் சூரத் தொகுதியில் போட்டியின்ற வென்ற அறிவிப்புடன் தனது வெற்றிக்கணக்கை பாஜக தொடங்கியது. இதனிடையே, பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாச்த்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜக - காங்கிரஸ் மோதல் மட்டுமன்றி, ஆம் ஆத்மி, பிஎஸ்பி மற்றும் பல பிராந்திய கட்சிகள் என குஜராத் களத்தில் அதிகமானோர் இருக்கிறார்கள். ஆனபோதும் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முதல் மக்களவை தேர்தல் வரை பாஜகவே வென்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் குஜராத்தில் பாஜக 22 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலையுடன் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தொடங்கின. அது விரைவில் பாஜக 25, காங்கிரஸ் 1 என்பதாக மாறியது.
குஜராத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் அமித் ஷா முதலிடம் வகிக்கிறார். இவர் காங்கிரஸின் சோனல் படேலை எதிர்த்து போட்டியிடுகிறார். இதர முக்கிய தொகுதிகளில் ராஜ்கோட்டில் பாஜகவின் பர்ஷோத்தம் ரூபாலா, காங்கிரஸின் பரேஷ் தனானியை எதிர்கொள்கிறார். போர்பந்தர் தொகுதியில் காங்கிரஸின் லலித்பாய் வசோயாவை எதிர்த்து பாஜகவின் மன்சுக் மாண்டவியா போட்டியிடுகிறார். பாவ்நகரில் பாஜகவின் நிமு பாம்பானியா, ஆம் ஆத்மி கட்சியின் உமேஷ் மக்வானாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்தியாவின் எந்த மூலையில் தேர்தல் முடிவுகள் அடியோடு மாறினாலும், பாஜக பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கும் மாநிலமாக குஜராத் உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என தேசிய அரசியல் மற்றும் மத்திய அரசின் இருபெரும் தலைவர்களை தந்த வகையில், குஜராத் பெரும் வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியிலும் பாஜக உள்ளது. இந்த தேர்தலிலும் அக்கட்சி அதனை நிச்சயம் நிறைவு செய்யும் என்பதையே ஆரம்பகட்ட நிலவரங்கள் காட்டுகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்