உலக பசி குறியீட்டில் 111வது இடம்... இலங்கையை விட மோசமான நிலையில் இந்தியா?

உலக பசி குறியீட்டில் 111வது இடம்... இலங்கையை விட மோசமான நிலையில் இந்தியா?

உலகளாவிய பசி குறியீடு 2023 தொடர்பான அறிக்கையில் இந்தியாவை காட்டிலும், அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 125 நாடுகள் அடங்கிய இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தியா 4 இடங்கள் சரிந்து 111வது இடத்தை பிடித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, ”இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் 16.6 சதவீதமாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.1 சதவீதமாகவும், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் இரத்த சோகை பாதிப்பு 58.1 சதவீதமாகவும் உள்ளது. உலகிலேயே அதிகமான குழந்தைகளை வீணடிக்கும் விகிதத்தில் இந்தியா 18.7 சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை பிரதிபலிக்கிறது. குழந்தைகளின் உயரத்தைப் பொறுத்து அவர்களின் எடையின் அடிப்படையில் வீண்விரயம் அளவிடப்பட்டுள்ளது.

இந்த அட்டவணையில் இந்தியா 28.7 புள்ளிகளைப் பெற்று 111வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 107வது இடத்தில் இருந்த இந்தியா, நடப்பாண்டு மேலும் 4 இடங்கள் சரிந்துள்ளது. அதேநேரம், நடப்பாண்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102வது இடத்திலும், வங்கதேசம் 81வது இடத்திலும், நேபாளம் 69வது இடத்திலும், இலங்கை 60வது இடத்திலும் உள்ளன.

இந்திய அரசு மறுப்பு:

அதேநேரம் உலக பசி குறியீட்டு அறிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த ஆய்வறிக்கைக்கு குறைபாடுள்ள அளவீடுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவின் உண்மையான நிலையை அவை பிரதிபலிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த குறியீடு தீவிரமான வழிமுறை சிக்கல்களால் பாதிக்கப்படுகிறது மற்றும் தவறான நோக்கத்தை காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் நான்கு அளவிடுகளில் மூன்று குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. அவை ஒட்டுமொத்த மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க முடியாது. நான்காவது மற்றும் மிக முக்கியமான காரணம் 3,000 என்ற மிகச் சிறிய மாதிரி அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் 'ஊட்டச்சத்து குறைபாடுகளை' பிரதிபலிக்காது. ஏப்ரல் 2023 முதல் போஷன் டிராக்கரில் பதிவேற்றப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அளவீட்டுத் தரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 2023 இல் 6.34 கோடியிலிருந்து அந்த எண்ணிக்கை, செப்டம்பரில் 7.24 கோடியாக அதிகரித்துள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in