கோடை காலத்தை முன்னிட்டு, மக்களின் அதிகரிக்கும் பயணத் தேவையை பூர்த்தி செய்ய இந்திய ரயில்வே நாடு முழுவதும் 9,111 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ரயில் போக்குவரத்து இன்றியமையாத போக்குவரத்தாக உள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் போக்குவரத்துக்கு ரயில்களை பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், சமீப காலமாகவே ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் முன்பதிவு பெட்டிகளில் கூட முன்பதிவில்லாத பயணச்சீட்டு உடையவர்கள் மற்றும் பயணச்சீட்டே எடுக்காமல் பயணிப்போர் ஏறிவிடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில் கோடை விடுமுறை காலம் தொடங்கிவிட்டதால் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் சென்று வருவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இத்தகைய சூழலில் ரயில் பயணிகளின் துயரங்கள் சொல்லி மாளாது. எனவே, அதிகரிக்கும் கூட்ட நெரிசல் மற்றும் மக்களின் கோடைகால பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ரயில்வே நாடு முழுவதும் 9,111 ரயில்களை இயக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் கோடை சீசனில் இயக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும். இதன் மூலம் பயணிகளுக்கு சுமூகமான, வசதியான பயணத்தை வழங்க முடியும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதேபோல் ரயில் நிலையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், முக்கிய ரயில் நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மண்டல ரயில்வே நிர்வாகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை சீராக கட்டுப்படுத்தவும், நெரிசல் போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் நடை மேம்பாலங்களில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் அல்லது ஐஆர்சிடிசி வலைதளம்/செயலி ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!
விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!
சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!