ஆயுளுக்கும் மறக்க முடியாத தீபாவளி பரிசு: ஊழியர்களுக்கு கார்களை வழங்கிய நிறுவன உரிமையாளர்!

கார்களைப் பரிசாக பெற்ற ஊழியர்கள்.
கார்களைப் பரிசாக பெற்ற ஊழியர்கள்.

தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர்கள் ஆயுசுக்கும் மறக்க முடியாத தீபாவளிப் பரிசாக  அவர்களுக்கு கார்களை தீபாவளி பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் மருந்து நிறுவன உரிமையாளர் ஒருவர்.

ஹரியாணா மாநிலம், பன்ச்குலா பகுதியில்  மிட்ஸ்கார்ட் (MitsKart) பார்மா சூட்டிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  மருந்துகளை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே. பாட்டீயா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களில் சிறப்பாக  பணியாற்றுபவர்களுக்கு கார்களை பரிசாக வழங்க முடிவு செய்தார் . அதையடுத்து அவர்களில் 12 ஊழியர்களை அவர் தேர்வு செய்தார். 

அவர்களுக்காக புத்தம் புதிய கார்களைப் பதிவு செய்து வாங்கிய அவர், டாடா பன்ச் (Tata Punch) கார்களை நேற்று பரிசாக வழங்கி, திகைக்க வைத்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்த ஒருவருக்கு கூட, தற்போது டாடா பன்ச் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் ஊழியர்கள்
மகிழ்ச்சியில் ஊழியர்கள்

தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களை வெறும் ஊழியர்களாக நான் நினைக்கவில்லை எனக்  கூறியுள்ள எம்.கே.பாட்டீயா, அவர்கள் அனைவரும்  நட்சத்திரங்கள் என வர்ணித்துள்ளார்.  இந்த 12 ஊழியர்களும் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்ததாகவும், வளர்ச்சிக்கு உதவி செய்ததாகவும் எம்.கே.பாட்டீயா கூறியுள்ளார். டாடா பன்ச் காரானது, இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் ஆகும்.

டாடா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, பன்ச் காரும் மிகவும் பாதுகாப்பானது. இந்தியச் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. டாடா பன்ச் பரிசாக கிடைத்துள்ள ஊழியர்களில் பலருக்கு இதுதான் முதல் கார் என தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in