சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரு தொகுதிக்கும், ஏப்ரல் 26ம் தேதி 3 தொகுதிகளுக்கும், மே 7ஆம் தேதி 7 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதோடு, துணை ராணுவப் படை, எல்லை பாதுகாப்பு படை, மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படை உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காண்கேர் மாவட்டத்தில் இன்று காலை முதல் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும், மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோட்டேபேத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீரென நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இதுவரை 18 நக்சலைட்டுகள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நக்சல் அமைப்பின் மூத்த கமாண்டரான சங்கர் சவ் தேரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் பாதுகாப்பு படையின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த என்கவுண்டரில் இதுவரை 3 போலீஸாரும் படுகாயம் அடைந்திருப்பதாக மண்டல காவல்துறை தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!
மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!